பெல்ஜியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் இன்று சுவிஸ் நாட்டிற்குள் பிரவேசம்!

24.2.12

அநீதி இழைக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஐ.நாசபையிடம் நீதி கேட்டு 19ஆவது நாளை கடந்து இன்று சுவிஸ் நாட்டிற்குள் சென்றடைகின்றது நீதிக்கான நடை பயணம்.பிரான்சில் இருந்து சுவிஸ் பாசல் மாநிலத்தில் அமைந்துள்ள St Louis ( 11ம் இலக்க Tram கடைசித்தரிப்பிடம்) எனும் எல்லைப்பகுதியினூடாக பிற்பகல் வந்தடையவுள்ளது.

இவர்களை வரவேற்பதற்கும் ஆதரவினை வழங்குவதற்கும் பாசல் மாநில தமிழர்களும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் மற்றும் சுவிஸ் நாட்டு தமிழ் மக்களும் அங்கு ஒன்றுகூடவுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் ஊடகம் ஒன்றில் இவர்களது நீதிக்கான நடைப்பயணம் குறித்த செய்தி பிரசுரமானதை அறிந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்மணி ஒருவர் இவர்களை இன்று சந்தித்து உங்களது இந்த நீதிக்கான நடைப்பயணம் வெற்றி பெற வேண்டும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்று கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

நீராகாரம் ஏதும் இன்றி ஈழத்தமிழர்களுக்கு இந்திய தேசத்திடம் நீதிகேட்டு உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்து காந்தி தேசத்திற்கே அகிம்சையை போதித்த தியாக தீபம் திலீபனின் சிந்தனைப்படி, மக்கள் புரட்சி வெடிக்கட்டும்.

எனவே அன்புக்குரிய தமிழ் உறவுகளே எழுச்சி கொண்ட எந்த ஒரு இனத்தையும் எவராலும் அழித்துவிட முடியாது ஒன்றுபட்ட பலத்துடன் சுதந்திரதாகத்துடன் வீறுகொண்ட மக்களை அடக்கிவிடவும் முடியாது என்பதை மார்ச் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஒருமித்த குரலில் முழக்கமிடுவோம் தாயக உணர்வுடன் திரண்டு வாருங்கள்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்பது குறித்த கருத்து லண்டன் பாராளுமன்றத்தில் முன்வைக்கபட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆகவே புலத்தில் வாழுகின்ற உறவுகளே சர்வதேசத்திற்கு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு ஒன்றுபட்டு வாருங்கள்.



0 கருத்துக்கள்: