மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து...

23.5.13

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலையாள மொழியை செம்மொழியாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான காலிப் பணியிடங்களை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சீரமைப்பால் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய கிடைக்கும்.
மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வருமான வரித்துறையில் 20 ஆயிரத்து 751 கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணா said :
அட இந்தியப் பதர்களே ! செம்மொழி தகுதி பெற இந்தியாவில் ஒரே ஒரு மொழிக்கு மட்டுமே தகுதி உள்ளது. முக்கியத் தகுதிகள், ஒரு மொழியானது இன்னொரு மொழியில் இருந்து நேரடியாக தோன்றியிருக்கக் கூடாது. அந்த மொழியின் சொற்களுக்கு வேறு மொழியில் வேர் சொல் தேடக் கூடாது. அந்த மொழியேலேயே வேர் சொற்கள் இருக்க வேண்டும். சொந்த மண்ணில் அந்த மொழியானது இலக்கண இலக்கிய வளங்களுடன் செழித்து வளர்ந்திருக்க வேண்டும். இப்படியான தகுதி இந்தியாவில் தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ளது. சமஸ்க்ரித மொழிக்கு கூட செம்மொழிக்கான எல்லா தகுதிகளும் இல்லை. இந்த நிலையில் மிகவும் பிற்காலத்தில் தமிழில் இருந்து பிரிந்து சமஸ்க்ரித கலப்புடன் தோன்றிய மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. இன்று மலையாள மொழிக்கு செம்மொழி தகுதி என்றால், நாளை இந்திய நாட்டின் வெளியே தோன்றிய, பல நவீன மொழிகளின் கலப்பால் உருவான, இலக்கியத் தொன்மை இல்லாத இந்தி மொழிக்கும் செம்மொழி தகுதியை இந்திய அரசு கொடுத்தாலும் வியப்பதற்கு இல்லை.
READ MORE - மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து...

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்

மத்தளயில் சர்வதேச விமான நிலையத்தை கட்டியதற்கு பதிலாக அங்கு குளம் ஒன்று கட்டியிருந்தால் மஹா பராக்கிரமபாகு போன்று ராஜபக்ஷ பெயரும் வரலாற்றில் பதிவாகியிருக்கும் என்று தெரிவித்துள்ள பொதுபலசேனா ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் இவ்வகையான பயனற்ற திட்டங்களை ஜனாதிபதிக்கு கூறி மக்களின் நிதிக்கு ஆப்பு வைக்கக் கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பொதுபலசேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,

ஜனாதிபதியை சூழவுள்ள ஆலோசகர்கள் புதுமையானவர்கள். விசித்திரமான ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்கள். உண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் ஆலோசகராக இருந்திருந்தால் நிச்சயம் மத்தளயில் விமான நிலையத்தை கட்ட அனுமதித்திருக்க மாட்டேன். மாறாக பராக்கிரம சமுத்திரம் போன்று பாரிய குளத்தை கட்டுமாறு வலியுறுத்தியிருப்பேன் எனக் கூறினார்
READ MORE - மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்

தமிழா்களின் ஈழப் போராட்டம் முடியவில்லை! போராளி யாசின் மாலிக்



இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் 'நாம் தமிழர்’ இயக்கத்தின் நான்காம் ஆண்டு விழாவுக்காகத் தமிழகம் வந்தவரிடம் விகடன் நிருபரினால்,...''ஈழப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதா? ஈழப் போராட்டத்தின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற வினா எழுப்பப்பட்டது.
அவா் வழங்கிய பதிலில்,
இலங்கையில் தமிழ் பேசியதாலேயே இனப் படுகொலை ஒன்றின் மூலமாக இலங்கைத் தமிழர்களின் இன விடுதலை ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், அந்தத் தமிழர்களின் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை.
ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல்.
அதை ஒருபோதும் அழிக்க முடியாது. மதச் சார்பற்ற வகையில் மக்கள் சமூகங்கள் ஒன்றிணைந்து அஹிம்சை வழியில் தங்களின் கோரிக்கைக்காகப் போராட வேண்டும்! இவ்வாறு பதிலளித்தார் அந்த விடுதலைப் போராளி தலைவா் யாசின் மாலிக்.
READ MORE - தமிழா்களின் ஈழப் போராட்டம் முடியவில்லை! போராளி யாசின் மாலிக்

கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவி

மாற்றுத் திறனாளிகளிற்கான உதவு தொகை வழங்கும் நிகழ்வு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் கடந்த 19ம் திகதி இடம்பெற்றுள்ளது. புலம் பெயர் உறவான சிங்கவாகனம் ராசசுந்தரம் அவர்களது முயற்சியினால் காரைநகர் மற்றும் மயிலிட்டி பிரதேசங்களிலிருந்து புலம் பெயர்ந்து சென்று லண்டன் மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வசித்து வரும் 16 புலம் பெயர் உறவுகளினது ஒருங்கிணைந்த பங்களிப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 49 பேருக்கு தலா 8000/- வீதம் உதவு தொகையானது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன் நிதிப் பங்களிப்பு செய்த புலம் பெயர் உறவுகளின் சார்பில் வீ.செல்லக்கதிரமலை, பெ.ரஜனிகாந்த், சு.ரவேந்திரன் குடும்பத்தினர் ஆகியோரும், கிளிநொச்சி வர்த்தக சங்கத்தலைவர் தி.சிவமாரன், கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன், இளைஞரணித் தலைவர் சு.சுரேன், அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கு.சர்வானந்தா, மாற்றுத் வரோட் நிறுவனப் பணியாளர் திருமதி அ. விக்னேஸ்வரி மற்றும் அவருடனான சக பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர். “மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தின் ஓர் அங்கமே. சமூகத்தின் ஏனைய அங்கத்தவர்களைப் போன்று செயலாற்றும் திறன் அவர்களிற்கும் உண்டு. எனவே அவர்கள் தமது இயலும் தன்மையினைக் கொண்டு சாதிக்க முயல வேண்டும்” என்று நிகழ்விற்குத் தலைமை வகித்த வர்த்தக சங்கத் தலைவர் தி.சிவமாறன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில், மாற்று வலுவுள்ளோர்கள் தமது வலுவினைக் குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும், அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் உதவிகளினைப் பயன்மிக்க வகையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அதன்மூலம் இத்தகைய மனிதாபிமானப் பணிகள் வெற்றி பெறுவதனூடாக அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் வகையில் செயற்படுவதற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட கரைச்சிப் பிரதேசசபை உப தவிசாளர் திரு. வ.நகுலேஸ்வரன் அவர்களும் தமது கருத்தினை வழங்கியிருந்தார்.
இந் உதவு தொகைக் கொடுப்பனவிற்கான நிதிப் பங்களிப்புச் செய்தோர் விபரம்:
1. செல்வி. ஆஷா இராசசுந்தரம்- லண்டன்
2. செல்வி. அனுஷா இராசசுந்தரம்- லண்டன்
3. செல்வி. இனிதா லோகேந்திரன்- லண்டன்
4. செல்வி. யோதிகா லோகேந்திரன்- லண்டன்
5. திரு. வெள்ளிமயில் ஜெகன்- லண்டன்
6. திரு. பாலசிங்கம் இதயம்- லண்டன்
  7. திரு. செல்லமயில் மோகன்- லண்டன்
8. திரு. தவராசா லவன்- லண்டன்
9. திரு. தவராசா ரதன்- லண்டன்
  10. திரு. இராசதுரை மதியழகன்- லண்டன்
11. திரு. தம்பிராசா மதியழகன்- லண்டன்
12. திரு. சுப்பிரமணியம் குவேந்திரம்- லண்டன்
13. செல்வி. சித்திரா யோகரட்ணம்- சுவிற்சர்லாந்து
14. திரு. பூபாலபிள்ளை சர்வானந்தா- லண்டன்
15. செல்வி. சர்மிளா இளமுருகன்- லண்டன்
16. செல்வி. விஜிதா நித்தியபாலன்- லண்டன்
READ MORE - கிளிநொச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 49 பேருக்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவி

புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆற்றிய உரை

22.5.13

18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு
இன்று மே-18, என் இன மக்களாகிய ஈழத்தமிழர்களின் இருண்ட நாளின் நான்காவது ஆண்டு நினைவு நாள்.
2009 ஆம் ஆண்டு என்பது, எமது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐக்கிய நாடுகளும் உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் ஒருபோதும் மறக்கப்பட முடியாத ஆண்டாக உள்ளது.
(மே-18) உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்றைய நாளை அடையாளப்படுத்துவதற்காக எழுச்சி கொள்வார்கள். 21வது நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை இதுவென்பதை இந்த உலகம் விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ உணரத்தான் போகிறது.
தமது அண்மைய அறிக்கையில் (பெற்றி அறிக்கை)  ஐக்கிய நாடுகள் தமது பயங்கரத் தவறுகளை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளன. அத்துடன், 70,000 ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் சுட்டிக்காட்டுவதாகவும் அது கூறியுள்ளது.
அவை சர்வதேச சமூகத்தில் மனிதநேயத்துக்கான எந்த அக்கறையோடும், நீதிக்கான எந்தக் கருசனையோடும் - பிரித்தானிய காலனித்துவ காலங்களிலிருந்து சிங்கள மேலாதிக்கத்திடம் பிரித்தானியாவால் ஆட்சி வழங்கப்பட்டதிலிருந்து 60 ஆண்டுகளாக மோசமாக-மோசமாக உருவாகி - 2009 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது மிக மோசமான உச்சக்கட்ட இனப்படுகொலைத் தாக்குதல் என்பதை விரைவாகவோ, காலம் தாழ்த்தியோ கற்றுக்கொள்வார்கள்.
இந்த இனப்படுகொலை முன்னெடுப்பின் காரணமாகவே புலம்பெயர் தமிழர்களுள் பலர் தாம் நேசித்த தாயகத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, உலக சமுதாயத்தின் மனிதாபிமானப் பரப்பால் இந்த உண்மைகள் உணரப்படும் வரை ஒருபோதும் ஓயாது.
அவர்களுள் ஒருவனாக நான். இந்த இனப்படுகொலையின் உச்சக்கட்டத்தை எனது குடும்பத்துடன் அனுபவித்தேன். எனது தந்தை கொல்லப்பட்டார். தாயார் முள்ளிவாய்க்காலில் காயம்பட்டார். நான்கு தடவைகள் நான் காயம்பட்டேன். எனது அம்மாவின் சகோதரியின் மகன் கொல்லப்பட்டார். மற்றுமொரு மகன் மோசமாகக் காயம்பட்டார்.
நாங்கள் உணவு இன்றி, தண்ணீர் இன்றி, காயங்களுக்கு மருந்துகள் இன்றி உயிர்வாழ முயற்சிப்பதற்காக நாங்கள் பதுங்குகுழிகளுக்குள்ளே மறைந்துகொள்ள வேண்டியிருந்தது. நாங்கள் பிழைக்க வேண்டியிருந்த அந்த கூட்டு வேதனைகளை இந்தக் குறுகிய நேரத்துக்குள் விபரிப்பது எனக்கு கடினம்.
இன்னும், நான்கு ஆண்டுகள் கடந்தும், எனது சகோதரனும் சகோதரியின் கணவரும் இலங்கைப் படையினரின் சிறைக்குள்தான் இருக்கிறார்கள். நான் பிறந்த மண்ணில் வாழமுடியாது, இலங்கைத் தீவை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தேன். இன்று அந்நிய நாட்டில் புகலிடத்துக்காக மன்றாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இலங்கையில் தமிழர்களின் நிலை.
நாங்கள் எங்களது கூட்டு சமூக கலாச்சார வாழ்க்கையை இழந்தோம், எங்கள் குடும்பங்களை இழந்தோம், எங்கள் தாய்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்தோம். வரலாற்று ரீதியாக நாங்கள் உண்மை பேசுகின்ற ஒரு மக்கள். தயவுசெய்து எங்களை உண்மை பேசவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுங்கள், எனக்கு பாதுகாப்புக் கொடுக்கள் எனவேதான் என்னால் உண்மை பேசமுடியும்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்பை நான் உங்களிடமிருந்து ஒருபோதும் மறைக்கவில்லை. ஆனால், என்மீதான உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டு சற்று வித்தியாசமாக இருப்பதை நான் உங்களுக்கு கூறவேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இன்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் உறுதியாகத் தமிழர்களிடமிருந்து எந்த ஆயுதச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை.
இனப்படுகொலைத் தாக்குதலின் பலியாட்களாக நாங்கள் இருந்தும், தமிழர்கள் பயங்கரவாதிகளாக இருப்பதுபோல் வகைப்படுத்துவது சற்று வித்தியாசமாக இல்லையா? இலங்கை அரச ஆயுதப் படைகளை நீங்கள் எப்படி விபரிக்கப் போகிறீர்கள்?
உண்மையிலே மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், என்னைப் பற்றி நீங்கள் உங்கள் மனதில் எழுப்பி வைத்திருக்கும் கேள்வி, பொதுவாகவே தமிழ் மக்கள் குறித்து உலகப் பொதுசனத்தின் மனதிலும் உள்ளது.
நான் என்ன கருதுகிறேன் என்பதை காட்டுவதற்காக நான் இணையத்தளத்தில் படித்த மிக அண்மையில் வெளியான ஒரு கட்டுரையை நான் இங்கே பயன்படுத்துகிறேன்.
'உருவறித் நிக்கோல் இலங்கையில் விடுமுறைகள் பற்றி எழுதுகிறார், பிரித்தானிய செய்தித்தாள் 'தி ஒப்சேவர்' இல் ஒரு 'Taxi' ஓட்டுநருடனான தனது கலந்துரையாடலை விபரிக்கிறார்.
'நீங்கள் ஒரு புத்த மதத்தவரா?' அந்த ஓட்டுநரிடம் நான் கேட்டேன்.
'இல்லை. நான் ஒரு இந்து.'
'ஓ, அப்படியானால் நீங்கள் தமிழனா?'
'ஆம். நான் ஒரு தமிழன்,' என்கிறார் ஓட்டுநர், பின்பு சத்தம்போட்டுச் சொன்னார், 'ஆனால், நான் ஒரு பயங்கரவாதி இல்லை!'
திரு.நிக்கோல் தனது கட்டுரையில் பின்வருமாறு கூறி நிறைவு செய்கிறார். அந்த ஓட்டுநர் ஒரு பயங்கரவாதி என ஒருபோதும் சிறுகணம் கூட நான் நினைக்கவில்லை, ஆனால், அவர் அதைக் கூறியதில் ஓர் உலகத்தின் வலியை நான் கேட்டேன்.

பிரித்தானியா இலங்கைத் தீவைவிட்டு வெளியேறியதிலிருந்து முதல் 30 ஆண்டுகளாக, தமிழர்கள் சிங்கள தேசத்திடமிருந்து தீவிர இனவாத வன்முறையை எதிர்த்து அமைதியான காந்திய வழிமுறைகளை மட்டும் பயன்படுத்தி போராடினார்கள்.
பாகுபாட்டுச் சட்டங்கள், தமிழ் தேயிலைத் தொழிலாளர்களின் குடியுரிமைகளைப் பறித்தல், தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே பல்கலைக் கழகம் நுழைய முடியும் என்ற கோரிக்கை, அரச ஆதரவோடு தமிழர் எதிர்ப்பு இனக்கலவரங்கள் - இவை அனைத்தும் அமைதியான ஆர்ப்பாட்டங்களை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தின் போதே நிகழ்ந்தன.
30 ஆண்டுகளாக அமைதி முறை ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதையும் அடைய முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பிற்பாடு மட்டுமே தமிழர்களிடமிருந்து ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. 30 ஆண்டுகளாக பலத்தோடு பலம் சந்திக்க வைக்கக்கூடிய ஒரு நிலையில் இனவாதப் பயங்கரவாதம் தமிழர்களை நிறுத்தியது. போர் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சித்தரிக்கப்படுகின்ற முறையை நான் நிராகரிக்கிறேன் - குறிப்பாக மேற்குலக ஊடகத்தால். வெறிபிடித்தவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் பயங்கரவாதக் குழு என்றும் சித்தரிக்கிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அறிவான, நவீன, முன்னோடியான இயக்கம். அது இலங்கைப் படைக்கு எதிராகப் போராடிய அதேவேளை, சாதி முறைமைக்கு எதிராகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் மிகவும் கடினமாகப் போராடியது.
25 ஆண்டுகள் கொண்ட தீவிர சமச்சீரற்ற போரின் பின்னர், தமிழர்கள் ஒரு பலம்வாய்ந்த நிலையை அடைந்ததும், தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள்? சமாதான முன்னெடுப்பைத் தொடங்கினார்கள்! சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்பு தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது.
சிங்களவர்களுக்கும் அது ஒரு நம்பிக்கையான காலமாக இருந்தது என நான் கேள்விப்பட்டேன். ஆனால், ஆரம்பத்தில் சமாதான முன்னெடுப்புக்கு முற்றுமுழுதான ஆதரவைக் காட்டிக்கொண்ட சர்வதேச சமூகம், அதன் நிலைப்பாட்டை மாற்றியது.

2003 ல் தமிழ் மற்றும் சிங்கள பேச்சுவார்த்தையாளர்கள் கைகளைக் குலுக்கிக் கொண்டிருந்த போது, உலகம் போரை நோக்கி வழிநடந்தது. இலங்கை சமாதான முன்னெடுப்பின் இணைத் தலைமை நாடுகளுக்குள் பிரதான இரு வலுவான நாடுகளுக்கிடையே பாரிய வேற்றுமைகள் நிலவின.
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈராக் போர் தொடர்பாக சர்ச்சையில் இருந்தன. இந்த சர்ச்சை இலங்கை சமாதான முன்னெடுப்பில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சமாதானம் தேவைப்பட்டிருக்கலாம் - ஆனால், அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரிவடைந்து கொண்டிருந்த மத்திய கிழக்குப் போர்களில் - பயன்படுத்த சுதந்திரமாக இருப்பதற்காக - தமிழர் தாயகத்தில் உள்ள திருகோணமலை போன்ற மூலோபாயத் துறைமுகங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டின.
இந்த வல்லரசுகள் துறைமுகத்தை அண்மித்த பகுதியை விட்டு விடுதலைப் புலிகளை வெளியேற்றத் தேவைப்பட்டது என்பது வெளிப்படையானது. எனவே, சமாதான முன்னெடுப்பானது வெட்கமின்றி அமெரிக்க கூட்டு நாடுகளாலும் சிங்கள தீவிரவாத மேலாதிக்கவாதிகளாலும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.
சமாதான முன்னெடுப்புக்கான இறுதித் தாக்கமானது அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்ததிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் மிகப் பெரிய அழுத்தத்துக்குள் உள்ளான போதே ஏற்பட்டது.
அமெரிக்காவும் பிரித்தானியாவும் விடுதலைப் புலிகளை வெறிபிடித்தவர்கள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் அழைப்பதற்கு ஒரு நீண்ட பாதை செல்வார்கள் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும்.
ஆனால், நன்றாக அறிந்துகொள்ள வேண்டிய ஏனைய நாடுகள் வெட்கமின்றி அமெரிக்க வரிசையைப் பின்பற்றுவது உண்மையிலே மிகவும் கவலையாக உள்ளது.
பயங்கரவாதியாக விபரிக்கப்படக்கூடிய எந்தச் செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை என்பதை உங்களுக்கு என்னால் கூறமுடியும்.
 மேலும், என்னால் கூறிக்கொள்ளக் கூடிய விடயம் என்னவென்றால், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவோ அல்லது பலவந்தமாக சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற எந்தச் செயற்பாடுகளிலும் விடுதலைப் புலிகளின் எந்தப் பகுதியும் ஈடுபடுத்தப்பட்டது என்பதில் எனக்கு சிறுதுளி கூட அனுபவமில்லை.
இங்குள்ள ஒவ்வொருவரும் நான் சொல்லவேண்டிய விடயத்துடன் உடன்படுவார்களோ அல்லது விளங்கித் தன்னும் கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலையின் இந்த நான்காவது ஆண்டு நினைவு நாளில் - சற்று சுதந்திரமான ஆய்வைச் செய்யுமாறும் அத்துடன், புரிந்துகொள்ள முயற்சி செய்யுமாறும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், என்னுடைய வழக்கு குறித்த ஒரு முடிவை நீங்கள் தற்பொழுது எடுக்கமாட்டீர்கள் - ஆனால், அதைக்காட்டிலும் ஏதோவொரு விடயத்தில் அதிகமாக முடிவுசெய்வீர்கள்.
நன்றி
READ MORE - புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆற்றிய உரை

இலங்கை அமைச்சருக்கு சுவிட்சலாந்தில் கவச வாகன பாதுகாப்பு! புலிகள் அச்சுறுத்தல்?


மூன்று மேல்மட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள சுவிட்சலாந்தின் ஜெனீவா நகருக்கு சென்றுள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சருக்கு, சுவிட்சலாந்து அரசு திடீரென சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பில், கவச வாகனமும் அடக்கம்! ஆனால், எதற்காக திடீரென தமக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது, அமைச்சருக்கே புரியவில்லை! உலக சுகாதார அமைப்புகளின் (The World Health, G-15, and Commonwealth Mental Health Conventions) கூட்டங்களே ஜெனீவாவில் தற்போது நடக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டங்களில் கலந்துகொள்ள வந்துள்ள வேறு எந்தவொரு நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இலங்கை அமைச்சருக்கு மட்டும், சாதாரண பாதுகாப்பைவிட மிக அதிகமாக, கவச வாகன பாதுகாப்பு வழங்கியுள்ளது, சுவிட்சலாந்து பாதுகாப்புத்துறை! இவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுக்கவும் இல்லை! தமக்கு கிடைத்த ‘ஏதோ’ உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்த சிறப்பு பாதுகாப்பை செய்துள்ளது சுவிட்சலாந்து! இது தொடர்பாக இலங்கை அமைச்சரை கேட்டபோது, “இந்தப் பாதுகாப்பு எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விடுதலைப் புலிகள் சுவிட்சலாந்தில் என்மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று இலங்கை உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என்றார்! கவச வாகனப் பாதுகாப்பு வழங்கப்படுவது, வெடிகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்குதான்! என்னங்க நடக்கிறது? சுவிட்சலாந்து உளவுத்துறைக்கு ‘ஏதோ’ தெரிந்திருக்கிறதா?நன்றி விறுவிறுப்பு
READ MORE - இலங்கை அமைச்சருக்கு சுவிட்சலாந்தில் கவச வாகன பாதுகாப்பு! புலிகள் அச்சுறுத்தல்?

கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள்!



கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.
நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது.
ஆனாலும் கார்பரேட் உயர் பீடங்களிற்கும் ஆட்சி அதிகார மையங்களிற்கும் இடையிலான முரண்பாடுகள், வேறொரு பரிமாணத்தை நோக்கி தள்ளப்படுகிறதா என்கிற விவாதங்கள் பரவலாக முன்வைக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும்.
இந்த கார்பரேட்டுக்களுக்கும், அதிகாரவாசிகளுக்கும் இடையே இணைப்புச் சக்தியாக விளங்கும் முகாமைத்துவ முதலாளித்துவமானது, எவ்வாறான புதிய தோற்றத்தை தனது பிம்பமாக, நடைமுறை சார்ந்து கட்டமைத்துக் கொள்ளும் என்கிற கேள்வியே தற்போது பரவலாக எழுப்பப்படுகிறது.
முதலாளித்துவ முறைமையின் படிமுறை வளர்ச்சியில் நிதியியல், முகாமைத்துவம் மற்றும் கார்பரேட் என்பவற்றின் வகிபாகம் முக்கியமானதாகக் கணிப்பிடப்படுகிறது.
உற்பத்தி, உபரி, மூலதன உருவாக்கம், வணிகம், வங்கி என்று நீண்டு செல்லும் முதலாளித்துவ கட்டமைப்பு, ஏதோவொரு நிலையில் கார்பரேட் முதலாளித்துவ (Corporate capitalism) முறைமையால் ஆக்கிரமிக்கப்படும் அல்லது அதுவாக மாற்றமடையும் நிலைநோக்கி நகரும்.
முதலாளித்துவ சந்தையானது, பன்னாட்டு கூட்டுத்தாபனங்களின் உயர்நிலை அதிகாரிகளின் ஆளுமைக்குள் ஆட்பட்டு இருக்கிறது. இவை வளர்ச்சியுற்ற நாடுகளின் அரைவாசிக்கு மேற்பட்ட வணிகங்களை கட்டுப்படுத்தும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதும், அதனை கூட்டுத்தாபனங்களில் முதலீடு செய்வதுமே இவர்களின் பிரதான தொழில்.
இத்தகைய கார்பரேட்டுக்களின் சந்தை ஆதிக்கமும் வளர்ச்சியும், அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்கும் அல்லது அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வேகமாக நகர்வதைக் காண்கிறோம்.
ஏகாதிபத்தியத்தின் உருவாக்கம், வளர்ச்சி, அதன் உச்ச கட்டம் எவ்வாறு இயங்கியல் போக்கில் நகரும் என்பது குறித்து ,இரஷ்யப் புரட்சியின் ஸ்தாபகர் லெனின் அவர்கள் தனது அறிவியல் சார்ந்த சிந்தனையை முன்வைக்கும் போது குறிப்பிட்ட விடயங்களை அவதானித்தால், இப்போதைய கார்பரேட் முதலாளித்துவத்தின் ஏகபோகமே அதன் உச்ச நிலையாக இருக்குமா ? என்பது குறித்தான விவாதங்களை உருவாக்குகின்றது.
இக்கட்டமைப்பு உதிர்ந்து விடாமல் இருப்பதற்கு, பங்குச் சந்தையில் செயற்கையான வீழ்ச்சியை உருவாக்குவது, சீனாவிற்கு நகரும் நேரடி முதலீடுகளை தடுத்து, ஏகபோக கார்பரேட் நிறுவனங்கள் மையம் கொண்டுள்ள நாடுகளை நோக்கி நிதி மூலதனத்தை திருப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்குலகம் திட்டமிடுவதை புரிந்து கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் குறித்து அரசறிவியலாளர்கள் கவலையடைகிறார்கள். சனநாயகக் கோட்பாட்டின் இருத்தலுக்கும், தனிமனித - சமூக உறவு நிலைக்கும் கார்பரேட்டின் ஏகபோகம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதுதான் அவர்களின் சமூக அக்கறையின் பாற்பட்ட வெளிப்பாடாக அமைகிறது.
தனிநபர் அல்லது ஒரு குழுவின் வளர்ச்சியானது, சனநாயக அரசொன்றினை விட பலமானதாக உருவாகி, அந்த அரசினையே கட்டுப்படுத்தும் வகையில் மாறுவது, பாசிசத்தை நோக்கி அந்நாட்டினை இட்டுச்செல்லும் என்கிற செய்தியினை பல முதலாளித்துவ சிந்தனையாளர்கள் முன்வைத்துள்ளனர்.
ஆனாலும், 1930களில் முன்வைக்கப்பட்ட எச்சரிக்கைகளைக் கடந்து, ஏகாதிபத்தியத்தின் உச்ச வடிவமாக கார்பரேட் முதலாளித்துவம் இன்று உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதன் இயக்கவியலைப் புரிந்து கொள்ளாமல், உலக ஒழுங்கின் அசைவியக்கத்தை தீர்மானிப்பது பொருத்தமற்றது.
சந்தைகளை விரிவுபடுத்த கார்பரேட்களால் உருவாக்கப்பட்டதே ,தாராளவாத பொருளாதாரக் கொள்கைத் திட்டம்.
இதனை உள்வாங்கிக் கொண்ட நாடுகளுக்கே பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உதவிகளை வழங்க முன்வந்தன.
இலங்கையில், மேற்குலக அணி சார்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்பாக, நாட்டின் வரவு-செலவு திட்டத்தினைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு அனைத்துலக நாணய நிதியத்தின் அரூபக்கரங்கள் இன்றும் தொழில்படுவதனை காண்கிறோம்.
59 பில்லியன் டொலர் மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்ட (GDP) இலங்கையைப் பொறுத்தவரை, பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிக அக்கறை இல்லை என்று சொல்லலாம். கடல் வழி அமைவிடம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தரிப்பிடம் என்பதைத் தவிர, தேயிலைக்கு அப்பால் உலகச் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு உற்பத்திகள் இங்கு இல்லை.
ஆனாலும், இலங்கையில் மேற்குலக கார்பரேட் மேலாதிக்கத்திற்கு எதிரான மாற்றுச் சக்தி தோற்றம் பெறக்கூடாது என்கிற அவதானமும் இவர்களிடம் காணப்படுகிறது. அத்தோடு, தேசிய இன முரண்பாடு பிரிவினைக்கு வழிவகுக்கக்கூடாது என்பது தொடக்கம், மேற்குலக கார்பரேட்டுக்களோடு சந்தை மோதலில் ஈடுபடும் ' பிரிக்ஸ்' அணியும் (BRICS) இங்கு கால் பாதிக்கக்கூடாது என்பது வரையான, தமது நலன்சார்ந்த எல்லாச் சாத்தியங்களையும் இது ஆய்விற்கு உட்படுத்துகிறது.
இங்கு குறித்துக் கொள்ள வேண்டிய விவகாரம் என்னவென்றால், அமெரிக்கா என்பது ஒபாமாவோ அல்லது ஜோன் கெரியோ அல்ல. அது கார்பரேட் உலகத்தால் சூழப்பட்ட ஒரு தேசம். இங்கு லாபமும், அதன் இருத்தலுமே முக்கியம்.
உழைப்புச் சுரண்டலிற்கான மனிதவளத்தின் தேவை கருதியே, ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிர்மாணித்தன. ஆட்சியாளர்கள் தமது புவிசார் நலனிற்கு முரணாக நிற்கும் போது, சலுகைகளை நிறுத்தி, அதே தொழிற்சாலைகளை பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு நகர்த்துவார்கள்.
ஐ.நா.வில் தீர்மானங்களையும் நிறைவேற்றுவார்கள். ஆனால் அவை, இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு முரண்படாதவாறு எழுதப்படும். ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை கால அவகாசமும் வழங்கப்படும்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்வதாக விடுத்த அறிவித்தல், தனியே அரசியல் மட்டுமல்ல. மாறாக பொருண்மிய நலன் கொண்ட கார்பரேட்களின் அழுத்தங்களும் பின்புலத்தில் இருக்குமென்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.
மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாது நல்லாட்சி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், போர்க்குற்றம், மற்றும் உள்நாட்டு சுயாதீன விசாரணை குறித்து தீர்மானப்போர் நடாத்துவோர், திட்டமிட்ட வகையில் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதையிட்டு பேச மறுக்கின்றனர். பறிக்கப்பட்ட காணிகளை படைத்துறை மட்டுமல்ல பல நாட்டுக் கம்பனிகளும் பங்கு போடத் துடிக்கின்றன.
ஆகவே மாற்று அரசியல் தெரிவு ஒன்றிக்கான தேவை இங்கு எழுவதை நிராகரிக்க முடியாதுள்ளது. மேற்குலகின் பாதை ஒன்றே, இருக்கும் ஒரே வழி என்போரும், இலங்கை- இந்திய ஒப்பந்தமும் அதன் 13 வது திருத்தச் சட்டமுமே தவிர்க்க முடியாத தெரிவு என்போரும், இவ்விரு வல்லரசாளர்களின் நலனும் நோக்கமும் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
தப்பித்தவறி, இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரணில் அணியினர் ஆட்சியமைத்தால், மேற்குலகின் போக்கில் மாற்றம் ஏற்படுமா? சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அழுத்தத்தை முன் வைக்குமா?.
இவ்வாறான பல கேள்விகள் நம்முன்னே எழுவது நிஜம். அப்போது, திரும்பவும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று ஒரு தரப்பினரும், இது முதல்படி, இரண்டாம் படி, மெல்ல மெல்ல நகர்வோம் என்று சிலரும் சொல்வார்கள்.
ஆதலால் அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவிருந்து உரையாடல்களையும், சந்திப்புக்களையும் மேற்கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
அத்தோடு, கார்பரேட்களின் மேலாதிக்கத்தைப் புரிந்து, தேர்தல் எல்லைகளைக் கடந்த, பரந்துபட்ட வகையில், கோட்பாட்டில் தெளிவுள்ள முற்போக்கான ஐக்கிய முன்னணி ஒன்றினை தமிழ் பேசும் மக்கள் அமைப்பதுதான் சரியான பாதை என்று தெரிகிறது.
இதயச்சந்திரன்
READ MORE - கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள்!

யாழ் இராணுவத் தளங்கள் பலாலிக்கு மாற்றம்



யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான இராணுவத்தளங்கள் அனைத்தும், பலாலி இராணுவ தளத்துக்கு மாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லப்டினன் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். பலாலி இராணுவ தளத்தை பிரதான இராணுவத் தளமாக மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவத் தளங்கள் மாத்திரமே பேணப்படவுள்ளது. ஏனைய அனைத்து தளங்களும், பலாலி தளத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE - யாழ் இராணுவத் தளங்கள் பலாலிக்கு மாற்றம்

துணைத்தளபதி " கேணல் ரமணன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

21.5.13




மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா படையினரின் குறிச்சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கேணல் ரமணன், எண்பத்தாறில் போராட்டத்தில் இணைந்தவர். அவருடைய மூத்த சகோதரரும் போராளி. சகோதரியும் இளைய சகோதரரும் போராளிகளாக இருந்தவர்கள்.
இன்னுமொரு சகோதரர் பாதை மாறிய ஒரு அமைப்பிலிருந்து விலகி, விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது துரோகிகளால் கொல்லப்பட்டவர். “புலிகளின்” வீடு என்பதாலும் புலிகளை ஆதரிக்கும் வீடென்பதாலும் அவரின் தாயாரின் வீடு படையினரால் குண்டு வைத்துத் தரை மட்டமாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் லெப். கேணல் றீகனின் (முன்னாள் மட்டு மாவட்டத் தளபதி) அணியில் செயற்பட்ட ரமணன், இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் துணிகரமான தாக்குதல்களைச் செய்தவர். பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் மறைந்திருந்து இந்தியக் காலாட் படைமீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றியதால் பாராட்டும் பெற்றவர்.
அதன்பின் தம்பிலுவில் துரோகிகள் முகாம் தாக்குதலுக்கு அணித்தலைவராகச் சென்றிருந்தார். பூநகரி வரலாற்றுச் சமரிலும் பங்கேற்றார். மட்டு நகரில் நியூட்டன் அவர்களின் காலத்திலும் அதற்குப் பின்னரும் படைத்துறைப் புலனாய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கேணல் ரமணன் குறிப்பிடத்தக்க முறியடிப்புப் புலனாய்வு நடவடிக்கைகள் பலவற்றைச் செய்திருந்தார்.
மதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன் மட்டக்களப்பிலுள்ள சிறிலங்கா படைச் சிப்பாய்களின் சிம்மசொப்பனமாக விளங்கியவர்.  துரோகிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் திறமை காட்டிய அவர், கருணாவின் சதியை முறியடிப்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தவர்.
கருணா மட்டக்களப்பிலிருந்து விரட்டப்பட்ட பின்பும் தாயகத்திற்கு எதிராகச் செய்ய முனைந்த பல சதித் தாக்குதல்களைத் தடுத்த பெருமையும் ரமணனுக்கு உண்டு. சுனாமியின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நேரடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோதே சிறிலங்கா படைகள் ரமணனைப் பின் தொடர்ந்தமை குறித்தற்குரியது.
அதன்பின் மாவட்டத்தின் துணைத் தளபதியாக படைத்துறை மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்ட அவர், பன்சேனை திலீபன் மருத்துவ நிலையத்தை அமைப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர்.
தளங்களிலும் மக்களிடையேயும் ஒரு திறன்மிக்க போராளியாகவும், நாவன்மையுடைய பேச்சாளராகவும், விளையாட்டு வீரராகவும், கலைகளில் ஆர்வமுடன் பங்கேற்பவராகவும் தன்னை அடையாளப்படுத்தியுள்ள ரமணன், அண்மைக் காலத்தில் தமது இந்திய ஆக்கிரமிப்புக்கால தலைமறைவுப் போராட்ட வாழ்க்கையை படியுங்கள் அறியுங்கள் என்பதை மட்டக்களப்புப் பதிப்பிற்காக எழுத ஆரம்பித்திருந்தார். அனுபவமும், தலைமைத்துவ ஆற்றலும் மண்ணின் இயல்பறிந்த செயற்பாடும் கொண்ட ஒரு தளபதி.
தாயகக்கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் வரிகள்
நெஞ்சை வருடிசெல்கின்றது மாவீரனே உன் நினைவில் ...
மரணம் அழைத்த ரமணன்
எங்கள் மனதை நிறைத்த வதனன்
கிழக்கில் உதித்த உதயன்
இனி கிடைக்க முடியா ஒருவன்
உந்தன் நினைவுகள் வந்து
எங்கள் உள்ளமெல்லாம் துயர் தந்து
செல்லுதே ரமணா ... கொல்லுதே ரமணா ...

READ MORE - துணைத்தளபதி " கேணல் ரமணன் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்

சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (52).
 இலங்கைத் தமிழரான இவர் உள்நாட்டு போர் காரணமாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறி தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார். தனது தாய் தங்கம்மாளையும் இவர் உடன் அழைத்து வந்திருந்தார்.
 இவரது மனைவி சித்ரா (45) இவர்களுக்கு சமீரா (12) என்ற ஒரே ஒரு மகள் இருந்தார். அவர் நங்கைநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
 சுந்தரேசன் ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். முதலில் நல்ல லாபத்துடன் நடந்து வந்த அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 இதன் காரணமாக அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட சுந்தரேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
கடந்த சில தினங்களாக அவருக்கு கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சுந்தரேசன் விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார். நேற்றிரவு மது அருந்தி விட்டு வீடு திரும்பிய அவருக்கும் அவரது மனைவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 விரக்தியில் இருந்த சுந்தரேசனுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மன உளைச்சலில் தவித்த அவர் அப்படியே தூங்கி விட்டார். பக்கத்து அறைகளில் அவரது தாய், மனைவி, மகள் படுத்துத் தூங்கினார்கள்.
 இன்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த சுந்தரேசனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பால் கொலை வெறி ஏற்பட்டது. குடும்பத்தையே தீர்த்து கட்டி விட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த அவர், சமையல் அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்தார்.
 முதலில் தாய் தங்கம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பிறகு மனைவி, மகள் இருவரையும் கழுத்தை அறுத்து கொன்றார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் அந்த அறைக்குள்ளேயே விழுந்து பிணமானார்கள்.
 பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர் அருகில் உள்ள ரெயில் தண்டவாளப் பகுதிக்கு நடந்து வந்தார். பரங்கிமலை, பழவந்தாங்கல் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் முதல் மின்சார ரெயில் வந்தது.
 அந்த ரெயில் முன் சுந்தரேசன் பாய்ந்தார். உடல் துண்டு, துண்டான நிலையில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன் உத்தரவின் பேரில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார்.
 சுந்தரேசன் உடலை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது அவரது செல்போன் சேதம் அடையாமல் இருப்பதை கண்டனர். அதன் மூலம் துப்பு துலக்கியபோது, அது ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் வசிக்கும் சுந்தரேசன் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
 இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீசார் சுந்தரேசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் 3 பேர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 பரங்கிமலை போலீஸ் துணைக் கமிஷனர் சரவணன், உதவிக் கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் இளவரசு, நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீனதயாளன், ராஜேந்திரன் மற்றும் போலீசார் தில்லை கங்காநகர் 42-வது தெருவில் உள்ள சுந்தரேசன் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். முதல் கட்ட ஆய்விலேயே குடும்பத்தினரை கொன்று விட்டு சுந்தரேசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
 இதையடுத்து 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வீட்டுக்குள் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதால் சுந்தரேசனுக்கு வேறு மர்ம நபர்கள் யாராவது உதவினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 இது தவிர மர்ம கும்பல் ஏதேனும் இந்த கொலைகளை செய்தனரா என்ற சந்தேகமும் போலீசாரிடம் உள்ளது. ஆதம்பாக்கம் போலீசாரும், தாம்பரம் ரெயில்வே போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து இந்த கொலை, தற்கொலை பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
READ MORE - தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்